Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனை – ஐபிஎஸ்!

ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனை – ஐபிஎஸ்!

2 minutes read

இரிட்டபல் பவல் சின்ட்ரோம், ஐபிஎஸ் என்பது நம் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். இது வாலிப பருவத்தில் தொடங்கி எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒருவருடைய உணவு பழக்கம், மன உளைச்சல் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும்.

ஐபிஎஸ் என்றால் என்ன
இது ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டில் குறைபாட்டை ஏற்படுத்தி உடலில் பலவிதமான அறிகுறிகளை உண்டாக்கக் கூடிய ஒரு பிரச்சனை. ஐபிஎஸ் பிரச்சனைக்கான காரணங்கள் என்பது குறிப்பிட்டு சொல்ல முடியாததாக இருக்கிறது என்றாலும் ஒருவரின் வாழும் சூழல், அவரின் உடல்வாகு, மரபியல் அம்சங்கள் மற்றும் மனதின் தன்மை போன்றவை இந்தப் பிரச்சினையை உண்டாக்க கூடியது என்று கூறலாம். ஜீரண மண்டல செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவது, பதட்டம், மன சோர்வு, வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்கள், அதீத பயம் போன்றவை இந்த நோயை ஏற்படுத்தலாம். இரைப்பையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளும் இந்த பிரச்சனையை ஏற்படுத்தலாம். மாதவிடாய் காலங்களிலும் மாதவிடாய் நிற்கும் காலங்களிலும், சினைமுட்டை வெடிக்கும் காலங்களிலும் இந்த பிரச்சனை சிலருக்கு தோன்றலாம். சில வகையான உணவுப் பொருட்களும் கூட இந்த பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஐபிஎஸ் இன் அறிகுறிகள்

வயிற்று வலி, உடல் எடை குறைதல், வயிற்றில் உப்புசம், மலம் கழிக்கும் பொழுது ரத்தக்கசிவு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி ஏற்படுதல், மலத்தை அடக்க முடியாமை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

ஐபிஎஸ் எப்படி கண்டு

பிடிக்கப்படுகிறது

இந்த நோய்க்கு என்று குறிப்பிட்ட பரிசோதனை முறைகள் எதுவும் இல்லை என்றாலும் அறிகுறிகளைப் பொறுத்து இது கண்டுபிடிக்கப்படுகிறது. ஒருவரின் உடல் பற்றிய முழு மருத்துவப் பரிசோதனைகளும், அவருடைய அறிகுறிகளை கேட்டறிதல், அவர் உடலை நேரடியாய் பரிசோதித்துப் பார்த்தும் இந்த பிரச்சனை கண்டுபிடிக்கப்படுகிறது. மேலும் கொலனோஸ்கோபி, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி, பாக்டீரியல் ஓவர் க்ரோத் பிரத் டெஸ்ட், ரத்தப் பரிசோதனைகள், மலப் பரிசோதனை போன்றவற்றின் மூலமும் இந்த நோய் கண்டறியப்படுகிறது.

ஐபிஎஸ் ற்கான சிகிச்சைகள்

ஐபிஎஸ் பிரச்சனையை மருந்துகள் மூலம் மட்டும் குணப்படுத்த முடியாது. இதை ஒருவரின் உணவு பழக்கம், வாழ்க்கைமுறை மாற்றம், மன உளைச்சல் மேலாண்மை போன்றவற்றின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

  • உணவில் அதிக நார் சத்துள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களான சோடா போன்றவற்றையும், மது, சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் பொருட்கள், கோதுமை போன்ற பொருட்களில் உள்ள க்ளூட்டன் போன்றவற்றை தவிர்ப்பதாலும் கட்டுப்படுத்தலாம்.
  • தினமும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வயிற்று வலிக்கான மருந்துகளை மற்றும் மனச் சோர்வு இருந்தால் அதற்கான மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பாக்டீரியா தொற்று இருந்தால் அதற்கான ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் வேண்டும்.
  • மலச்சிக்கல் இருந்தாலும் அதற்கான மருந்துகளையும் உணவு முறை மாற்றங்களையும் செய்துகொள்ள வேண்டும்.
  • மனநல ஆலோசகர் மூலம் மனதில் இருக்கக்கூடிய பயம் கவலை பதட்டம் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை பற்றி அலசி அதற்கான தீர்வுகளையும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உடல் தளர்த்தல் பயிற்சிகளையும் மன தளர்த்தல் பயிற்சிகளையும் மனநல ஆலோசகர்களிடம் கற்றுக்கொள்ளலாம்.
  • மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சி இந்த பிரச்சனைக்கு அதிக அனுகூலமான வை.

ஐபிஎஸ் பொருத்தவரை அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கை முறையை சரியான வழியில் அமைத்துக் கொண்டால் இந்த பிரச்சினையிலிருந்து முழுவதுமாக மீண்டு ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More