1. இந்த நோய்த் தொற்று மனிதனுக்கு ஒன்றும் புதிய தொற்று கிடையாது. NOT a novel infection. மனிதர் மத்தியில் முதன் முதலில் இந்த நோய்த் தொற்று 1970 களிலே கொங்கோவில் கண்டறியப்பட்டிருக்கிறது.
2. தற்போதும் நமது பகுதிகளில் நோய்த் தொற்றுப் பரவலை ஏற்படுத்தும் Chicken pox (அம்மை நோய்) வைரைஸ் குடும்பத்தை சேர்ந்ததுதான் இந்த Monkey Pox.
3. இது நேரடியாக மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ மாட்டாது. குரங்கு, எலி, அணில் போன்ற விலங்குகளிடம் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கே இந்த நோய்த் தொற்று ஏற்படும்.
4. முதன் முதலில் தடுப்பூசி மூலமாக உலகை விட்டு விரட்டியடித்த பெரியம்மை small pox நோய்க்கு எதிரான வக்சீன்கள் இந்த Monkey Pox ஐயும் தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.
5. கொரோனா போன்று ஒரு Pandemic பெருந்தொற்றாக உருவெடுக்கும் சாத்தியம் இந்த வைரஸூக்குஇல்லை.
மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் செல்லும் உல்லாச/ நாடுகாண் பயணிகள் மூலம் இந்த தொற்றானது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இதற்கு முன்னரும் பல தடவை கண்டறியப்பட்டிருக்கின்றது.
அந்த வரிசையில், இந்த வருட மே மாதம் முதல் இதுவரை 12 இற்கு மேற்பட்ட நாடுகளில் 100 தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், இந்த முறை இவர்களில் பலர் நோய்த் தொற்றுள்ள ஆபிரிக்க நாடுகளோடு நேரடி தொடர்பின்றி தொற்றுக்குள்ளாகியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை CWC என்று சொல்வோம்( Clusters Without Contacts). ஆகவே இந்த வைரஸ், மிருகங்களிடம் இருந்து மனிதனுக்கு தொற்றுவது போல ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்குப் பரவுவதற்கு பாலியல் தொடர்பு போன்றதொரு நெருங்கிய தொடர்பு (Close Contact- intimacy) தேவை என்று இப்போது அறியப்பட்டிருக்கிறது.
குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள்:
சிக்கன் பொக்ஸ் அம்மையை போன்ற நோய் அறிகுறிகளே இதற்கும் உள்ளன. இந்த வைரஸ் மனிதனுக்கு தொற்றியதிலிருந்து அறிகுறிகளை ஏற்படுத்த எடுத்துக் கொள்ளும் காத்திருப்புக் காலம் (Incubation Period)
6 முதல் 21 நாட்களாகும். அதன் பின்னர் முதல் ஐந்து நாட்களில் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல்வலி போன்றவை ஏற்படலாம். அது போல கழுத்து, கமக்கட்டு(axilla), கால்கவுடு (inguinal) போன்றவற்றில் நெறி கட்டுதல்/ வீங்குதல் LYMPHADENOPATHY உருவாகும்.
பெருமளவான ஊடங்களில் காட்டப்படும், நம்மை பயமுறுத்தும் படங்கள் போன்ற, அம்மை கொப்புளங்கள் தோலில் தோன்றும். இது முகம் மற்றும் கைகால்களில் அதிகமாகக் காணப்படும். அம்மை கொப்புளங்களை விட கொஞ்சம் பெரிதாகவும் அதிகமாகவும் காணப்படும். இவை சாதாரணமாக 2 வாரங்களுக்குள் தானாக குணமாகிவிடும். இந்தக் கொப்புளங்களும் சிக்கன் பொக்ஸ் போலவே பெரும்பாலும் தழும்பின்றி மறையும்.
ஆகவே இதற்கு அச்சப்பட ஒன்றும் இல்லை. இருப்பினும் தொற்றைத் தவிர்க்கும் எளிய வழிகள் காணப்படுகின்றன.
1. தொற்று அடைந்தவர்களை தனிமைப்படுத்தல். அவர்கள் உபயோகித்த துணி, துவாய் போன்ற பொருட்களை உபயோகிக்காமல் இருத்தல்.
2.தொற்றுக்குள்ளானவரின் வீட்டில் வசிப்பவர்களும் குறைந்தது 2 தொடக்கம் 3 வாரங்கள் தங்களை முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது.
3.எப்போதும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்தல்.
ஆகவே குரங்கம்மை குறித்து அதீத அச்சம் தேவையில்லை. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது சாதாரண அம்மை நோய் போன்று வந்து தானாகவே குணமடைந்து விடும். எந்த மருத்துவ பராமரிப்பும் தேவைப்படாது.
எனினும் சிறுவர்கள், வயோதிபர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களிடத்திலும் சற்று வீரியத்துடன் நோய்த்தொற்று உருவாகலாம். எனவே முன்னெச்சரிக்கை அவசியம். ஏனெனில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களிடையே மரண வீதத்தையும் இந்த குரங்கு அம்மை வெளிப்படுத்திஇருக்கிறது.எனவே எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கையும், அவதானமும் அவசியமாகும்.
நன்றி தினகரன்(குழந்தைநல மருத்துவ நிபுணர் டொக்டர் பீ.எம். அர்சாத் அஹமட்.)