துளசி மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி. இந்த துளசியானது ஹைப்போகிளைசீமிக் பண்புகளை கொண்டுள்ளதால், இது உடலில் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. அதற்கு துளசியை தினமும் மென்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் நீரில் 6-8 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிக்கலாம்.
இஞ்சி அன்றாட சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இதில் ஜிங்க் உள்ளது. இது இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. ஆகவே இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வருவது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வெந்தயம் இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க உதவுகிறது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச்சிறந்த உணவுப் பொருள். சிறிது வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
பட்டை கணையத்திற்கு இன்சுலினை வெளியிட உதவி புரிந்து, உடலில் குளுக்கோஸ் செயல்முறையை ஊக்குவிக்கிறது. எனவே ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்
வேப்பிலை உடலில் மாயங்களை செய்யக்கூடிய திறன் கொண்டது. அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஏனெனில் வேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. அதற்கு வேப்பிலையை மென்று சாப்பிடலாம் அல்லது 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.