மதுரையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, வைகை எஸ்பிரஸ் ரயில் முன் நின்று கட்சியினர் உடன் ஆர்பாட்டம் நடத்தினார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மதுரை மேற்கு நுழைவு வாயிலில் இருந்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்துக்குள் வந்தார். அவரை ரயில்வே போலீஸாரும், மதுரை போலீஸாரும் வழி மறித்தனர்.
ஆனாலும் கட்சியினர் வேகமாக வந்ததால் தடுக்கமுடியவில்லை. பின்னர் இரண்டாவது நடைமேடையில் நின்ற வைகை எஸ்பிரஸ் இன்ஞின் முன் தொண்டர்களுடன் நின்ற வைகோ மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான சிங்கள அரசை கண்டித்தும் அங்கு நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும் மத்திய காங்கிரஸ் அரசையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க பா.ம.க உள்ளிட்ட கட்சிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு எதிராக அ.தி.மு.க அரசு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் ஆனதால் வைகோ உள்ளிட்ட தொண்டர்களை கைது செய்வதாக மாநகர துணை கமிஷனர் தமிழ் சந்திரன் கூறினார். ஆனால் தமிழர்களுக்கான போராட்டத்தை இடையூறு செய்ய கூடாது என போலீஸ் அதிகாரிகளிடம் வைகோ கோபமாக பேசினார். இதனால் அங்கிருந்தோர் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது மறியல் நடந்து கொண்டு இருந்த போது அடுத்த தண்டவாளத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வைகோ பேசியதாவது:=-
இலங்கையையில் ஈழத்தமிழர் படுகொலை நடந்த நிலையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச போர் குற்றவாளியாக விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்ற சூழலில் அங்கு காமன்வெல்த் மாநாடு நடத்துவது சரியல்ல. இந்தியாதான் இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜனநாயகக மரபை மீறியதற்காக நைஜீரியா பாகிஸ்தான், உகாண்டா, தென் ஆப்ரிகா, பிஜிதீவு உள்ளிட்ட நாடுகள் எல்லாம் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்துள்ள இலங்கையை நீக்க்காமல் இலங்கை அரசை தப்பிக்க வைக்கும் வகையில் மாநாட்டை இந்திய அரசு மறைமுகமாக நடத்துகிறது.
இதைத்தான் தென் ஆப்ரிகாவின் நோபல் பரிசு பெற்ற லெஸ்டிட்டோ இலங்கை காமன்வெல்த் மாநாட்டை அனைத்து நாடுகளும் புறக்கணித்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் ஹிட்லர் முசோலினி, நாசிக் படைகள் போல் செயல்பட்ட இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்ததோடு இப்போது குற்றங்களில் இருந்து தப்பிக்க வைக்க ஆதரவு அளித்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈழதமிழர்கள் படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் காமன்வெல்த் மாநாட்டை நடத்தினாலும் எங்கள் போராட்டம் தொடரும் , சாதி சமயம் கடந்து தமிழ் இளைஞர்கள் போராடுவார்கள் நிச்சயம் நீதி கிடைக்கும்.என்றும் வைகோ கூறினார். மேலும் அவர் பேசுகையில் 4வருடத்திற்கு பிறகு இசைபிரியாவின் படுகொலைக்கு ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கிறார்.
ஈழதமிழர் படுகொலையை கருணாநிதி ஏற்கனவே கிண்டல் அடித்துள்ளார். இதற்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இந்தியாவின் துரோகத்தை உணர்த்தவே இந்தபோராட்டம் நடத்துகிறோம். ராஜபக்ஷேவை நிச்சயம் குற்றவாளி கூட்டில் நிறுத்துவோம். அப்போது காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசும் குறவாளி கூண்டில் நிறுத்தப்படும். என கூறினார்.
பின்னர். 7.10 மணிக்கு அவரை கைது செய்வதாக கூறி மூன்று கட்டமாக பெண்கள் உட்பட 321 பேரை கைது செய்து போலீஸார் பஸ்களில் அழைத்து சென்றனர். அதன் பிறகு 7.20க்கு வைகை எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்பட்டது. தான் கைதானாலும். தொண்டர்கள் அடுத்தடுத்து ரயில்களை மறிப்பார்கள் என்று கூறியதால் மதுரை ரயில் நிலையம் மற்றும், தண்டவாளங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.