காவியுடை தரித்த சிலரது ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பௌத்த பிக்குமார் சமூகமும் இனவாத நிலைக்கு தள்ளப்படுகின்றது. இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க அரசு இரு வாரகால அவகாசத்தை நேற்று சபையில் கோரியது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.கட்சி எம்.பி. புத்திக பத்திரன மேற்கண்ட கேள்வியை பிரதமரும் பௌத்த சாசன மத அலுவல்கள் அமைச்சருமான டி.எம்.ஜயரத்னவிடம் எழுப்பியபோதே அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பதிலளிக்க இரு வார கால அவகாசத்தைக் கோரினார்.
புத்திக பத்திரன எம்.பி. தனது கேள்விகளில் ஒழுக்கக்கேடு மற்றும் குடியியல் குற்றவியல் சட்டங்களின் கீழ் தவறிழைத்தவர்களை காவியுடை தரித்தவர்களாக தொடர்ந்தும் பௌத்தசாசனத்தில் இருப்பது பௌத்த சாசனத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பதையும் காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்கக்கேடான விடயங்கள் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த பிக்குமார் சமூகமும் இழிவுக்கு உள்ளாகின்றது.
ஒழுக்க மீறல் செயல்களில் ஈடுபடுகின்ற காவியுடை தரித்தவர்களை சாசனத்திலிருந்து அகற்றும் அதிகாரம் அனைத்து பௌத்த மதப் பிரிவுகளின் சங்க சபைக்கோ அல்லது மகாநாயக்க தேரருக்கோ இல்லை என்பதையும் அமைச்சர் அறிவாரா எனக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கவே அரசு இரு வார கால அவகாசத்தைக் கோரியது.