அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மற்றும் பிபில் 20 ஓவர் தொடரின் சிட்னி தண்டர் அணிக்கும் தொடர்ந்து விளையாடுவார்.
கடந்த ஆண்ட் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற ஜாக் காலிஸ், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் ஜாக் காலிஸ் சோபிக்கவில்லை.
இதனையடுத்து அவர் ஓய்வு பெற்றார். 328 ஒருநாள் போட்டிகளில் அவர் 17 சதங்களுடன் 11,579 ரன்களை ஆரோக்கியமான சராசரியான 44.36 என்ற விகிதத்தில் எடுத்துள்ளார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் 25 போட்டிகளில் விளையாடி 666 ரன்களை எடுத்திருந்தார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த ஒரே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 55.37 என்பது குறிப்பிடத்தக்கது.
“இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் நான் ஆடிய விதம் 2015 உலகக் கோப்பையில் விளையாடும் கனவைத் தகர்த்தது. அந்தத் தொடரில் நான் முடிந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். 2015 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வெல்வதற்கு வாழ்த்துகிறேன்.
கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, ரசிகர்கள் மற்றும் என் நலம் பாராட்டுபவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிட்னி தண்டர் அணியுடன் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் உள்ளது. முடியுமானால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவுவேன்”
இவ்வாறு கூறியுள்ளார் ஜாக் காலிஸ்.