செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, அமெரிக்கா அனுப்பிய, ‘கியூரியாசிட்டி ரோவர்’ விண்கலம், மணலில் சிக்கியுள்ளது. பூமியில் இருந்து, 57 கோடி கி.மீ., தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 1 டன் எடையுள்ள, ‘மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி’ என்ற விண்கலத்தை, 2012 ஜனவரியில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது. எட்டு மாத பயணத்திற்குப் பிறகு, அதே ஆண்டு, ஆகஸ்ட் 6ல், வெற்றிகரமாக, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி, அந்த கிரகத்தின் பல பகுதிகளை ஆய்வு செய்து, அது தொடர்பான படங்களை நாசாவிற்கு அனுப்பி வந்தது. இரண்டு ஆண்டு கால ஆய்வுக்காக சென்றுள்ள ரோவரின் பணி, இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த மாதம், மவுன்ட் ஷார்ப்பின் என்ற பகுதியை நோக்கி, ரோவர் விண்கலம் சென்று கொண்டிருந்த போது, அதன் ஆறு சக்கரங்களில், ஒரு சக்கரத்தில் ஓட்டை ஏற்பட்டது. எனினும், மீதமுள்ள ஐந்து சக்கரங்களின் உதவியுடன் ரோவர் விண்கலம், தன் ஆய்வை தொடர்ந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு சோதனையாக, மவுன்ட் ஷார்ப்பில் உள்ள, மறைவான பள்ளத்தாக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த ரோவர் விண்கலம், அங்கிருந்த வழுக்கும் மணல் பகுதியில், வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளது.
பூமியிலிருந்தவாறு, அதை மீட்கும் முயற்சிகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.