உலகில் நாற்பது விநாடிகளுக்கு ஒரு தற்கொலை நிகழ்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது..
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:
2012-ஆம் ஆண்டில் இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்ந்தன.
சராசரியாக, இந்தியாவின் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 21.1 சதவீதம் என்ற விகிதத்தில் தற்கொலைகள் நிகழ்ந்தன.
இந்த விகிதம் உலகிலேயே அதிக அளவில் இருப்பது தென் அமெரிக்க நாடான கயானாவில்தான். ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 44.2 சதவீதம் என்ற அளவுக்கு தற்கொலை விகிதம் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, வட கொரியாவில் 38.5 சதவீதமும் தென் கொரியாவில் 28.9 சதவீதமும் உள்ளன.
உலகெங்கும் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சராசரியாக, ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒரு தற்கொலை என்ற விகிதத்தில் தற்கொலைகள் நிகழ்கின்றன. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 75 சதவீத தற்கொலைகள் நிகழ்கின்றன. இதற்கு ரசாயன உரம் உட்கொள்ளுதல், தூக்கு, துப்பாக்கி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து கிடைத்துள்ள புள்ளிவிவரத்தின்படி, தற்கொலைக்கான பொருள்கள் கிடைப்பது அரிதாகும்போது, தற்கொலை மனப்பான்மை குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.