அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால், தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் தலையை துண்டித்து கொல்லும் வீடியோ காட்சியை பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இது, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரியாக, இரண்டு நிமிடம், 27 நொடிகள் ஓடிய இந்த வீடியோ காட்சி, உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வீடியோ பதிவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிரிட்டன் அதிகாரிகள், அவை முழுவதும் உண்மையானவை எனக் கூறியுள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த செயலுக்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர், ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.’பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்’ எனவும், இரு தலைவர்களும் மீண்டும் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மூவரைப் போல், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினரின் பிடியில் ஏராளமானோர் பிணைக் கைதிகளாக சிக்கியிருப்பதால், அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும், என, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது கொல்லப்பட்டுள்ள ஹெயின்ஸ், பிரிட்டனை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்காக பணியாற்றியவர். அவருக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். அவரின் குடும்பத்தார் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் செயல், கடும் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க, பிரிட்டன் முழு வீச்சில் செயல்படும். அனைத்து நாடுகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்காவின் அனைத்து வகை நடவடிக்கைகளுக்கும், பிரிட்டன் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிக்கும்.
– -டேவிட் கேமரூன், பிரிட்டன் பிரதமர்