எபோலா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ.6,100 கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை வெறும் ரூ.61 லட்சம் மட்டுமே நிதியுதவி பெறப்பட்டுள்ள தாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியதாவது:-
எபோலா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்காக ரூ.6,100 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியைத் திரட்டு வதற்காக ஒரு நிதியம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரொக்கமாக ரூ.61 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதையும் ஒரே ஒரு நாடுதான் (கொலம்பியா) வழங்கி உள்ளது. இதுதவிர, சுமார் ரூ.122 கோடியை இந்த நிதியத்துக்கு வழங்குவதாக பல்வேறு நாடுகள் உறுதி அளித்துள்ளன.
மனித உயிரை பலி வாங்கும் எபோலா வைரஸால் கினி, லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ள இதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
குறிப்பாக இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிதியத்துக்கு உடனடியாக நிதியுதவி அளிக்க வேண்டும். நிதியுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ள நாடுகளும் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.