ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு மகத்தான வெற்றியை கண்டு உள்ளது.
ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா) மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளது. இந்த நிலையில் புதிய உறுப்பு நாடுகளை தேர்வு செய்ய நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் தேர்தல் நடந்தது. இதில் இந்தியா மீண்டும் உறுப்பு நாடாக தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவுக்கு ஆதரவாக 162 வாக்குகள் கிடைத்தன. இது இந்தியாவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாக கருதப்படுகிறது.
இதேபோல வங்காளதேசம், இந்தோனேஷியா, நெதர்லாந்து, நைஜீரியா, போர்ச்சுக்கல், கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக தேர்வு செய்யப்பட்டன. தற்போது உள்ள உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31–ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பு நாடுகளின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 1–ந் தேதி முதல் 2017–ம் ஆண்டு ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி வரை ஆகும்.