அமெரிக்காவில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 1,500 பேர் அங்கிருந்து விரட்டப்படுவதற்கு காரணமாக இருந்த போலி பல்கலை நிறுவனருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு டிரை வாலி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதனை சூசன் ஜியோ பிங் சூ (44) என்ற பெண்மணி தொடங்கினார். குறைந்த கல்வி கட்டணம், மேலும் கடினமான எப்-1 விசாவையும் பல்கலைக்கழகமே பெற்றுத்தர உதவி செய்யும் என்பதால் இந்தியாவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலையில் சேர்ந்தனர்.
11 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் ஒரே ஆண்டில் 939 மாணவர்களுடன் அசுர வளர்ச்சி அடைந்தது. இதற்கிடையே, 2011ம் ஆண்டு அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், டிரை வாலி பல்கலைக்கழகம் போலியானது என்றும், அதில் படிக்கும் இந்திய மாணவர்கள் பெற்றிருப்பது போலி விசா என்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை மூடி, இந்திய மாணவர்கள் 1,500 பேரையும் வலுக்கட்டாயமாக நாட்டுக்கு திருப்பி அனுப்பினர்.
பல்கலை நிறுவனர் சூசன் மீது விசா மோசடி, போலி பல்கலை, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் 3 ஆண்டுக்கு பிறகு தற்போது தீர்ப்பளித்துள்ளது. போலி விசா, போலி பல்கலைக்கழகம் என 1500 இந்திய மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்த சூசனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கு, சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.