பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க முன்னாள் பெண் தூதர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து அமெரிக்க உளவு நிறுவனம் அவரை உடனடியாக விசாரணை நடத்தியுள்ளது..
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ராபின் ராபேல் (67) இவர் மேற்கு ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் இணைவெளியுறவு அமைச்சராகவும், துனீஷியாவிற்கான அமெரிக்க தூதர்,இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் என முக்கிய பொறுப்புக்களை வகித்து வந்தார். கடந்த 2005-ல் ஓய்வு பெற்றார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு ஆலோசகராகபணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் அமெரிக்க தூதர் ராபின் ராபேல், பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருந்து கொண்டே உளவு வேலை பர்த்ததாகவும், சமீப காலமாக அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு போலீசார் வாஷிங்டனில் உள்ள அவரது இல்லம் , அலுவலகத்தில் ரெய்டு நடத்தி சோதனையிட்டனர். அவரது மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் டேட்டாக்கள் உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை ஆய்வு செய்து, அவரது அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். ராபின் ராபேலிடமும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 1993-ம் ஆண்டு இந்தியா வந்த ராபின் ராபேல், அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து காஷ்மீர் விவகாரத்தில் இவர் தலையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.