இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன.
தமிழக மீனவர்களின் மரண தண்டனையை அதிபர் மகிந்த ராஜபக்சே ரத்துசெய்து விட்டதாகவும், இதனையடுத்து, சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட அவர்கள் ஐவரும் தலைநகர் கொழும்புவில் உள்ல இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசின் உயர் வட்டாரங்கள் இன்று மாலை தெரிவித்தன.
அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் உணமையாக இருக்கும்பட்சத்தில், விடுதலையான இந்த 5 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.