ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர் (ரூ. 2.4 லட்சம் கோடி) இழப்பு ஏற்படுவதாக அந்நாட்டு நிதித் துறை அமைச்சர் ஆன்டன் சிலுவனோவ் தெரிவித்தார்.
மாஸ்கோவில் நடைபெற்ற பொருளாதாரக் கருத்தரங்கில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ரஷிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இது 30 சதவீதம் வீழ்ச்சியடைந்தால், ஆண்டுக்கு 90 பில்லியன் டாலர் (ரூ. 5.4 லட்சம் கோடி) முதல் 100 பில்லியன் டாலர் வரை இழப்பை சந்திப்போம். மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால், ரஷியாவுக்கு ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர் (ரூ. 2.4 லட்சம் கோடி) இழப்பு ஏற்படும் என்றார்.
அதிபர் புதின், ஞாயிற்றுக்கிழமை செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில், “தற்காலத்தில், உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. பொருளாதாரத் தடை, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, ரஷிய கரன்சி ரூபிளின் மதிப்பு சரிவு இவையெல்லாம் எங்களுக்கு மட்டுமல்லாமல், பிற நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கும்’ என எச்சரித்தார்.
ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம், ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கின்றன என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் சனிக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.
மக்களிடையே குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி, ஆட்சி மாற்றம் கொண்டு வர முயற்சி நடக்கிறது என அவர் கூறியிருந்தார்.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டு வருவதைக் காரணம் காட்டி, ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.