பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அந்த மசோதாவில், பிணைத் தொகை அளிப்பது தொடர்பாக காப்பீடு நிறுவனங்களுக்குத் தடை, இளம் வயது ஜிஹாதிகளின் பாஸ்போர்ட் முடக்கம், இணையதளப் பயன்பாட்டைக் கண்காணித்தல் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இதனை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் தெரசா மே தெரிவித்தார்.
பிரிட்டிஷ் போலீஸார் சார்பாக, பயங்கரவாத எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதிகளிடம் சிக்கியவர்களை விடுவிக்கப் பிணைத் தொகை அளிப்பது பிரிட்டிஷ் சட்டத்துக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் விரோதமானது.
ஐ.எஸ். போன்ற காட்டுமிராண்டிக் குழுக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால், மேலும் பல உயிர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். பிணைத் தொகை வழங்கும் நடைமுறையை சர்வதேச அளவில் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் பிரிட்டன் முன்னிலை வகிக்கிறது என்றார்.
கடத்தப்பட்டவர் சார்பாக, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பிணைத் தொகை வழங்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் அந்நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.