பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியது. தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த கைபர் பழங்குடி பிராந்தியத்தில் நடந்த இந்த தாக்குதலில் 57 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
திரா பள்ளத்தாக்கில் புதன்கிழமை 20 முறை விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு பல்வேறு தலிபான்களின் மறைவிடம் அழிக்கப்பட்டதாகவும், இதில் 57 தீவிரவாதிகள் இறந்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளை அழிப்பதற்கு தேசிய செயல் திட்டத்தை பிரதமர் அறிவித்ததையடுத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் அழித்தபோதிலும், இன்னும் பல தீவிரவாதிகள் இருக்கிறார்கள். மலைப்பாங்கான எல்லையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள், தாக்குதல் தீவிரமாகும்போது ஆப்கானிஸ்தானுக்கு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.