எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தூக்கிலிட்டால், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொலை செய்வோம்’ என, பாகிஸ்தான் அரசுக்கு, தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிக்குள் புகுந்த, தெஹரீக் தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த, 100க்கும் அதிகமான குழந்தைகளை, கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் உள்ள பயங்கரவாதிகளை தூக்கிலிடும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, நேற்று முன்தினம் இரவு, இரண்டு பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர். இதையடுத்து, தலிபான் அமைப்பிடமிருந்து, பாக்., அதிகாரிகளுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும், முகமது கரகானி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.