இந்தியாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் செய்யும் வேளையில், எல்லை தாண்டி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
இந்தியாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 36 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தில்லியில் இம்மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
அவரது இந்த சுற்றுப்பயணத்தின்போது எல்லைத் தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் இருப்பதையும், அதற்கான முயற்சிகள் நடைபெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஒபாமாவின் வருகையின்போது தாக்குதல் ஏதேனும், பாகிஸ்தான் மண்ணில் இருந்து வந்தவர்களால் நடத்தப்பட்டது என கண்டறியப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.