இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு, மாரிட்டம்பட்டு ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இலங்கை தலைமைத் தேர்தல் அதிகாரி மகிந்தா தேசப்பிரிய சனிக்கிழமை கூறினார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, உள்நாட்டுப் போரில் புலம்பெயர்ந்த மக்கள் மறுகுடியர்த்தப்படும் பணி நிறைவடையாததால் இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ், அந்த அமைப்பின் ராணுவ மையமாகத் திகழ்ந்த புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது சுமார் 3 லட்சம் பேர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.