இலங்கை உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார்.
1952-ஆம் ஆண்டு பிறந்த இவர் யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரி, கொழும்பு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். சில காலம் தனிப்பட்ட முறையில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர், பின்னர் இலங்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
துணை சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி உயர்வும் அதன் பிறகு, மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார்.
அந்நாட்டில் புதிய அரசு பதவியேற்றதும், முன்னாள் அதிபர் ராஜபட்ச நியமித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மோகன் பெரிஸ் பதவி விலக நெருக்குதல் அளிக்கப்பட்டது.
அவருக்கும் முன்னர் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக சட்ட விரோதமாக நீக்கப்பட்டதால், அவரை மீண்டும் தலைமை நீதிபதியாக்க புதிய அரசு முடிவு செய்தது. ஷிராணி பண்டாரநாயக மீண்டும் தலைமை நீதிபதியாக புதன்கிழமை முறைப்படி பதவியேற்ற பின்னர், உடனடியாக ராஜிநாமா செய்தார்.
அவருக்கு அடுத்த மூத்த நீதிபதி கே.ஸ்ரீபவன் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்கவுள்ளார். இதற்கு முன்னர், சுப்பையா சர்வானந்தா எனும் தமிழர் 1984 முதல் 1988 வரை இலங்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.