இலங்கை மீனவர்கள் கடலில் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதாகக் கூறி, அந்த நாட்டிலிருந்து மீன் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடை தொடரும் என அந்த அமைப்பு வியாழக்கிழமை கூறியது.
இலங்கையில் சட்ட விரோதமாகவும், உரிய இடங்களில் முன்கூட்டியே தெரிவிக்காமலும், ஒழுங்கற்ற முறையிலும் மீன்பிடிக்கும் மீனவர்களை அந்த நாட்டு அரசு முறைப்படுத்தத் தவறியதாகக் கூறி, அந்த நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் கடந்த 2012-ஆம் ஆண்டு தடை விதித்தது.
தடையை விலக்கிக் கொள்வதற்காக பல முறை ஐரோப்பிய யூனியன் விதித்த கெடுவுக்குள் மீன்பிடித் தொழிலை இலங்கை அரசு முறைப்படுத்தாததால், அந்தத் தடை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியனுடன் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் பேச்சு நடத்தினார்.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “”மீன்பிடிப்பு விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனை திருப்திப்படுத்தும் வகையில் இலங்கை அரசு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால், அந்த நாட்டு மீன்கள் இறக்குமதிக்கான தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும். அதுவரை தடை தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.