இந்தியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் ரிக்கி கெஜ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர், நீலா வாஸ்வானி ஆகியோருக்கு ‘கிராமி’ விருது கிடைத்து உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறந்த இசைக்கான 57வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மொத்தம் 88 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் புதுயுக இசைப் பிரிவில் ரிக்கி கெஜ், தென்னாப்ரிக்க புல்லாங்குழல் கலைஞர் வவ்டர் கெல்லர் மேன் உடன் இணைந்து தயாரித்த ‘விண்ட்ஸ் ஆப் சம்சாரா’ என்ற ஆல்பம் கிராமி விருதை தட்டிச் சென்றது. இது, ரிக்கியின், 14வது இசை ஆல்பம். பெங்களுரைச் சேர்ந்த ரிக்கி கெஜ், பல கன்னட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிறந்த குழந்தைகள் இசைக்கான பிரிவில் நீலா வாஸ்வானியின், ‘ஐ ஆம் மலாலா’ கிராமி விருது வென்றது. இதே பெயரில் வெளிவந்த தன் புத்தகத்தை இசையுடன் கூடிய உரைநடை வடிவில் நீலா வாஸ்வானி மாற்றி அமைத்திருந்தார். சிந்தி தந்தைக்கும், ஐரிஷ் – அமெரிக்க தாய்க்கும் பிறந்த நீலா, பல நூல்களை வெளியிட்டுள்ளார். கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மறைந்த சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கரின் ‘டிரேசஸ் ஆப் யு’ இசை ஆல்பம், விருது பெறும் வாய்ப்பை இழந்தது.
0