தமிழர்களின் தலைமை திருநாளாம் பொங்கல் விழா என்றாலே வீடுகளின் வாசலில் பூசணிப்பூவுடன் கூடிய மாக்கோலமும் வாயிற்பாடியில் மாவிலை தோரணமும் இன்றியமையாத அம்சமாக இருக்கும்.
உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் தைப்பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடிவரும் நிலையில் அம்மக்களின் பாரம்பரியம் சார்ந்த தேவையான மாவிலையை ஆன்லைனில் விற்பனை செய்ய பிரபல ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான ‘அமேசான்’ வலை விரித்துள்ளது.
இன்றைய சிறப்பு விற்பனை என்ற தொகுதியில் 25 மாவிலைகளின் விலை ரூ.5509 என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மாமரங்களில் இருந்து பறிக்கப்பட்ட இலைகள், பறிக்கப்பட்ட அன்றே மரப்பட்டையால் செய்யப்பட்ட சிறப்பு பெட்டிகள் மூலம் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ள இந்த நிறுவனம் மேற்கண்ட 25 மாவிலைகளை வாங்குபவர்களுக்கு தவணை முறை (இ.எம்.ஐ.) வசதியும் உண்டு என குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ குணம் வாய்ந்த இலைகள் என்ற பின்னணியில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தாலும் தைத்திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தோரணத்துக்காக மாவிலை தேடும் வெளிநாடுவாழ் தமிழர்களை குறிவைத்தே இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளதாகவும் பொருள்கொள்ள தோன்றுகிறது, அல்லவா?
இதை ஆமோதிக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ள அமேசான் வலைத்தளத்தில் பலரும் பலவிதமாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.