வங்காளதேசத்தில் உள்ள நாராயண்கஞ்ச் மாநகர கவுன்சிலர் நஷ்ருல் இஸ்லாம். வக்கீல் சந்தன்குமார் சர்க்கார். இவர்கள் உள்பட 7 பேர் டாக்கா நாராயண்கஞ்ச் இணைப்பு ரோட்டில் காரில் சென்ற போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டனர்.
பல நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்டு இவர்களது பிணங்கள் ஷதாலக்யா ஆற்றில் வீசப்பட்டன. இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஒரு வருட விசாரணைக்கு பிறகு நாராயண்கஞ்ச் முன்னாள் கவுன்சிலர் நூர் உசேன், மற்றும் ராணுவ முன்னாள் தளபதி லெப்டினெட் கர்னல் தரீக்சயீத் உள்ளிட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நாராயண்கஞ்ச் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. அதன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் முன்னாள் கவுன்சிலர் நூர்உசேன், முன்னாள் ராணுவ தளபதி தரீக்சயீத் உள்ளிட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் தவிர மேலும் 9 பேருக்கு ஜெயில் தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நூர்உசேன் சித்தரிக்கப்பட்டார். இக்கொலைகளின் மூளையாக அவர் செயல்பட்டார்.
கொலை செய்தவுடன் வங்காள தேசத்தில் இருந்து தப்பி இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஊடுருவினார். அவரை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக கேட்டுக் கொண்டதன் பேரில் வங்காளதேசத்திடம் அவரை இந்தியா ஒப்படைத்தது.