ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை காவலில் வைக்க டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் நீதிமன்ற காவல், இன்றுடன் முடிவடைந்தமையினால், ப.சிதம்பரத்தை சி.பி.ஐ.அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போதே எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மீண்டும் திகார் சிறையில் வைப்பதற்கு ப.சிதம்பரத்தை சி.பி.ஐ.அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் நீதிமன்ற காவல் முடிவடைவதால், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) மாலை, சி.பி.ஐ.நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட இருக்கின்றார்.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்பிணை கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது.
இதனால் இன்று சி.பி.ஐ.நீதிமன்றத்தில், ப.சிதம்பரத்தை முன்னிலைப்படுத்திய பின்னர் நீதிபதி உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது நடவடிக்கையை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சி.பி.ஐ.தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்பினை மனுவை கடந்த மாதம் 20ஆம் திகதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் அவர் கைது செய்யப்பட்டார்
பின்னர் சி.பி.ஐ.நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இவ்வாறு சி.பி.ஐ.காவலுக்கு 4 முறை அனுப்பப்பட்ட ப.சிதம்பரத்தை கடந்த 5ஆம் திகதி நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ.நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகின்றமையினால், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சி.பி.ஐ.நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.