பிரதமர் நரேந்திர மோடியையும், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் கொலை செய்ய ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பு தனி படை ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை இந்திய உளவுத் துறை அளித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தீவிரவாத குழுக்களின் செயல்பாடு அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியையும், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் கொலை செய்வதற்கென தனி படை ஒன்றை அமைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான ஷாம்ஷெர் வானியின் தொலைபேசி அழைப்பை இடைமறித்து கேட்டதில், இது தெரிய வந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் இந்த திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதும் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அஜித் தோவலின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.