வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி  இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில்   3A  சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையைத் தொலைத்துக் காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில்  வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்றுச் சாதித்துள்ளார்.

இவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர். வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையும்  கல்வியில் முன்னேற்றுவதற்காக உழைத்த தாயார் போற்றுதலுக்குரியவர் .