உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இலவசமான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என மலேசிய அரசுக்கு மலேசிய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
“கொரோனா போன்ற தொற்றுக்கு எல்லைகளோ நாடுகளோ தெரியாது. புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கு போதுமான வீட்டுவசதி, சுகாதார வசதிகள் இல்லாமையால் தொற்று எளிதில் பரவக்கூடிய நெருக்கமான குடியிருப்புகளில் அவர்கள் வாழவேண்டிய நிலை உள்ளது,” என வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சலீம் பஷிர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என அச்சப்படும் புலம்பெயர்ந்தவர்கள், மற்றும் அகதிகளுக்கு அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கையை இந்த நேரத்தில் அரசு அளிக்க வேண்டும் என அச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நடைபெற்ற மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்படுவோம் என்ற அச்சமின்றி தாமாக முன்வந்து பரிசோதித்துக் கொள்ளுமாறு மலேசிய அரசு தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என பஷிர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சூழலில் மலேசிய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.