ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பின்னர் இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்திருப்பதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா பாதிப்பும், உயிரழப்புக்களும் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று முடித்தோரில் 80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 20 சதவீதம் பேர்தான் மரணம் அடைந்துள்ளர்கள்.
ஊரடங்கு அழுல்படுத்துவதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 நாட்களில் இரு மடங்கு ஆனது. ஊரடங்கை அமுல்படுத்திய பிறகு சமீபத்தில் 6.2 நாட்களில் தான் இரு மடங்காகி இருக்கிறது.
19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் தேசிய சராசரியை விடக் குறைவாகவே உள்ளது.
நாடு முழுவதும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயிரத்து 919 மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 21 ஆயிரத்து 800 படுக்கைகளும் உள்ளன.
கொரோனா பரிசோதனைக்காக 5 இலட்சம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் சீனாவில் இருந்து வந்துள்ளன. அந்தக் கருவிகள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு, மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவ பரிசோதனைக்கான உபகரணங்கள் போன்றவை குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.
கொரோனாவுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் பல்வேறு வகையான முயற்சிகளில், நம்முடைய பாரம்பரிய முறைப்படி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறை பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறிவதற்கான கருவியை உருவாக்குவதிலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நமது பரிசோதனைத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்திய விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சி சபை மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து அந்த கருவியை உருவாக்க முயன்று வருகின்றன.
இந்த கருவி தயாராகிவிட்டால், இதன்மூலம் கொரோனா தொற்று பரிசோதனையை துல்லியமாகவும், 30 நிமிடங்களிலும் செய்து முடிக்க முடியும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வெளிநாடுகளுடன் இணைந்து நாம் செயற்படுகிறோம்” என அவர் தெரிவித்தார்.