மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக மருத்துவர்களை சந்திக்க அகதிகள் கைவிலங்கடப்பட்டு கொண்டு சென்ற நிகழ்வு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அகதிகளை குற்றவாளிகளைப் போல அழைத்துச்சென்றதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தின் கீழ், இந்த நடைமுறை சட்டவிரோதமானது எனக் கூறப்படும் நிலையில் Public Interest Advocacy மையம் இது தொடர்பாக பெடரல் நீதிமன்றத்தில வழக்குத் தொடுத்துள்ளது. மனநலச் சிக்கல்கள், சித்ரவதை போன்றவற்றை கடந்த வந்த அகதிகளை இவ்வகையில் நடத்துவது பாகுபாடானது எனக் கூறியுள்ளார் யாசிர் எனும் அகதி.
தேவையற்ற இந்த கைவிலங்கு பயன்பாடு ஆஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் Commonwealth Ombudsman கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
“கைவிலங்கிடப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்து காத்திருப்பதை நோயாளிகள்(அகதிகள்) விரும்பவில்லை. கைவிலங்கிடப்பட்ட அவர்களையே அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தாய்மார்கள் அவர்களைக் கண்டு குழந்தைகளை இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள் ” எனக் கூறியிருக்கிறார் அகதிகளுக்கான மருத்துவர்கள் குழுவின் நிறுவனர் பேரி பேடர்போட்.
“பாதுகாப்பு வேண்டி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தேன். ஆனால் தடுப்பில் நான் வைக்கப்பட்டிருப்பது கொடுங்கனவாக இருக்கிறது. தொடர்ந்து எனக்கு கைவிலங்கிடப்பட்டிருப்பது எனது மனதை மேலும் மேலும் பாதிக்கிறது,” எனக் கூறுகிறார் யாசிர் எனும் அகதி.