சீனாவின் ஷியான்-6 கப்பலின் வருகைக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்களை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு தமது குறித்த கப்பல் தொடர்பான பரிந்துரைகளை தாம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான ஷியான்-6 கப்பலானது எதிர்வரும் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருவதாக சீனாவினால் அறிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தபோதும், பின்னர் வெளிவிவகார அமைச்சு அனுமதிக்கான விடயத்தினை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டது.
எனினும், குறித்த அறிவிப்புக்குப் பின்னர் இராஜதந்திர ரீதியில் இந்தியா உள்ளிட்ட தரப்புக்களினால் உத்தியோகப் பற்றற்ற அதிருப்திகள் அரசாங்கத்துக்கு வெளியிடப்பட்டன.
விசேடமாக இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி நேரத்தில் அதனை இரத்து செய்திருந்தார்.
குறித்த சீனக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கினால் இராஜதந்திர ரீதியில் பதற்றமான நிலைமைகள் உருவாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா உட்பட இந்திய ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில், சீனக் கப்பலுக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதுகுறித்து இன்னமும் தீர்மானம் அறிவிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் அறிவித்தார்.
இவ்வாறான தருணத்தில் பாதுகாப்பு அமைச்சு, கடற்றொழில் நீரியல் வளத்துறையுடன் இணைந்து சீனாவின் ஷியான்-6 கப்பல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதியைக் கோரியிருந்த நிலையில், அது தொடர்பிலான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது சீனாவின் ஷியான்-6 கப்பலானது தென்சீனக் கடலிலிருந்து இந்து சமுத்திர பிராந்தியத்தினை அண்மித்ததாக, மலேஷியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருக்கின்றது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயம் நிறைவடையும் வரையில் குறித்த கப்பலின் இலங்கை விஜயத்தை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில், அதுகுறித்து இலங்கையில் உள்ள சீன தூதரகமோ அல்லது சீன வெளிவிவகார அமைச்சோ இதுவரையில் எவ்விதமான பதிலளிப்புக்களையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.