Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணில் நம்பிக்கையுடன் செயற்பட்டால் கூட்டமைப்பு முழு ஆதரவு! – சம்பந்தன் அறிவிப்பு

ரணில் நம்பிக்கையுடன் செயற்பட்டால் கூட்டமைப்பு முழு ஆதரவு! – சம்பந்தன் அறிவிப்பு

2 minutes read

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் மிகவும் நம்பிக்கைக்குரியனவாக இருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்து நாங்கள் எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழங்குவோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (10) உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். இதற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கவிருக்கின்றோம்’ என்று தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் ‘வணக்கம் இலண்டன்’ இன்று (12) வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்முடன் பேசுவதென்றால் முக்கியமாக புதிய அரசமைப்பு தொடர்பில்தான் அந்தப் பேச்சு அமைய வேண்டும்.

தமிழ்பேசும் மக்களுடடைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த விடயம் சம்பந்தமாக எமது நிலைப்பாட்டை விளக்கி நாம் எழுத்திலே சமர்ப்பிக்க வேண்டிய கோரிக்கைகளை ஏற்கனவே இலங்கை அரசிடம் சமர்ப்பித்திருக்கின்றோம். அந்தக் கோரிக்கைகள் மிகவும் விபரமான கோரிக்கைகள்.

ஆனால், அதன் அடிப்படையில் ஒன்றும் நடைபெறவில்லை. ஆட்சிகள் மாத்திரம் மாறியிருக்கின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் தாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அரச தரப்பினர் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு வித்தியாசமாக இருந்து – முன்னேற்றம் காணக்கூடிய வகையில் கையாளப்படுமாக இருந்தால் எங்களுடைய பரிபூரணமான ஒத்துழைப்பை நாங்கள் தருவோம். அதைப் பற்றி எவ்விதமான சந்தேகமும் வேண்டாம்.

‘நாங்கள் பேசப் போகின்றோம்; செய்யப் போகின்றோம்’ என்று சொல்லிக்கொண்டிருக்காமல் பேசிச் செய்ய வேண்டியதை ஜனாதிபதி தலைமையிலான அரச தரப்பினர் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம்.

எங்களைப் பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் மிகவும் நம்பிக்கைக்குரியனவாக இருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்து நாங்கள் எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழங்குவோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More