சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் மூலமாக பிசிசிஐக்கு 4000 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
2021 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்திய விதம் குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த வருடப் போட்டியை விடவும் இந்த வருடச் செலவுகளில் 35% குறைத்துள்ளோம். கொரோனா காலக்கட்டத்தில் ஐபிஎல் மூலமாக 4000 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது. தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது.
மும்பை – சென்னை விளையாடிய முதல் ஆட்டத்தில் இதுவரையில்லாத அளவுக்கு முதல் ஆட்டத்துக்கான பார்வையாளர் எண்ணிக்கை கிடைத்தது. 1800 பேருக்காக 30,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனாவால் ஜோகோவிச் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் இருவிதமான மனநிலையில் இருந்தோம். ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டாம் எனப் பலரும் சொன்னார்கள்.
மூன்று மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் யாருக்காவது ஏதாவது ஏற்பட்டால் என்ன ஆவது? ஆனால் ஜெய் ஷா போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தார். எங்கள் எல்லோரையும் விடவும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா எனச் சந்தேகப்பட்டவர்களும் பிறகு எங்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்காக 200 அறைகளைத் தனியாக ஒதுக்கியிருந்தோம். சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா என்கிற செய்தியை அறிந்தவுடன் அறிகுறிகள் எதுவும் உள்ளதா எனக் கேட்டோம்.
அறிகுறிகள் இல்லாததால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். எல்லாத் தருணங்களிலும் எங்களுக்கு ஒத்துழைத்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரே பிரச்னை என்னவென்றால், 14 நாள்களுக்கு வீரர்களைத் தனிமைப்படுத்தியதுதான் என்று கூறியுள்ளார்.