Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இலங்கை?

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இலங்கை?

3 minutes read

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக இரு விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இலங்கை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கடந்த 14 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாளில் 127 ஓட்டங்களுடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மழை பாதிப்புக்கு இடையே நடந்த 2 ஆவது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களை எடுத்தது. 

அணித் தலைவர் ஜோ ரூட் 168 ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த நிலையில் 3 ஆவது நாளான நேற்று இங்கிலாந்து அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. ஜோ ரூட் 177 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 7 ஆவது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். 

அபாரமாக ஆடிய அவர் தனது 4 ஆவது இரட்டை சதத்தை இந்த இன்னிங்ஸில் நிறைவு செய்ததுடன், ஆசிய கண்டத்தில் இரட்டை சதம் விளாசிய 5 ஆவது இங்கிலாந்து வீரர் மற்றும் இலங்கை மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனைகளை ஜோ ரூட் தன்வசப்படுத்தினார்.

ஜோ ரூட் நிலைத்து நின்றாட அணியின் ஓட்ட எண்ணிக்கை 400 ஓட்டங்களை கடந்தது. இறுதி விக்கெட்டுக்காக ஆட்டமிழந்த ஜோ ரூட் மொத்தமாக 321 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 228 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதற்கிடையில் ஜோஸ் பட்லர் 30 ஓட்டங்களுடனும், சாம் குர்ரன் மற்றும் டோம் பெஸ் ஆகியோர் டக்கவுட்டுடனும், ஜாக் லீச் 4 ஓட்டத்துடனும், மார்க் வூட் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஸ்டூவர்ட் பிராட் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றூவான் பெரோரா 4 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனால் 286 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி அவர்கள் இருவரும் முதல் விக்கெட் இழப்புக்காக 101 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் 38 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் சாம் குர்ரனின் பந்து வீச்சில் குசல் பெரேரா 62 ஓட்டங்களுடன் ஜாக் லீச்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய குசல் மெண்டீஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க லசித் எம்புல்தெனிய களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தார்.

இந் நிலையில் 61 ஆவது நிறைவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணத்தினால் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆடுகளத்தில் திரிமான்ன 76 ஓட்டங்களுடனும் எம்புல்தெனிய எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிக்காதிருந்தனர்.

இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 130 ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருப்பதால், தற்போதைய சூழலில் இங்கிலாந்து வலுவான நிலையில் உளளது.

இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More