இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ், அவுஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் நேரடியாக தந்தையின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஐ.பி.எல். தொடர் முடிந்தவுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதற்காக சிட்னி சென்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தார்.
அந்த நேரத்தில், பெங்களூரில் இருந்த அவரது தந்தை காலமானார். இதனால், சிராஜ் நாடு திரும்ப இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால், அவர் நாடு திரும்பச் சம்மதிக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி, வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்பதுதான் தனது தந்தையின் இலட்சியம். அதை நிறைவேற்றுவதுதான் என் கடமை எனத் தெரிவித்து நாடு திரும்பாமல் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து முதல் டெஸ்ட்டில் சிராஜுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை, அதன் பின் இரண்டாவது டெஸ்ட்டில் மொகமது ஷமிக்கு காயம் ஏற்படவே, இவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
சிறப்பாக விளையாடிய இவர், நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, அவுஸ்திரேலியாவை கதறவிட்டார். இந்திய அணியும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனால் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சிராஜிற்கு இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்தன.
தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி தற்போது நாடு திரும்பியுள்ளது. சிராஜ் முதலில் வீட்டிற்குச் செல்லாமல் விமான நிலையத்திலிருந்து நேரடியாகத் தந்தையின் சமாதிக்குச் சென்று மலர் தூவி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.