மேலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க சிறந்த பொறிமுறையுடன் கூடிய கட்டமைப்பு பாடசாலை மட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும் . இதனொரு கட்டமாகவே எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி பிரதேச சபைக்கு உட்பட்ட மைதானம் ஒன்றை அபிவிருத்தி செய்யும் தேசிய திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் , செய்தி முகாமையாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை இன்று புதன்கிழமை ஊடக அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய விளையாட்டுத் துறையில் பல்வேறு அபிவிருத்திகள் அவசியமாகின்றது. இதனை மையப்படுத்தி கிராமிய மட்டத்திலான மைதானங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக பாடசாலை மட்டத்தில் விளையாட்டுக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்கு அந்த மாணவர்களுக்கு தேவையான மைதானங்கள் உள்ளிட்ட பயிற்சிவிப்பாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை மையப்படுத்தி 51 வீர வீராங்கனைகள் தற்போது சிறப்பு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இதே போன்று தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க சிறந்த பொறிமுறையுடன் கூடிய கட்டமைப்பு பாடசாலை மட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும் . இதனொரு கட்டமாகவே எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி பிரதேச சபைக்கு உட்பட்ட மைதானம் ஒன்றை அபிவிருத்தி செய்யும் தேசிய திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. இதனடிப்படையில் 342 மைதானங்கள் முதற்கட்டமாக அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக தலா 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கரப்பந்தாட்டம் மற்றும் வலைபந்து உள்ளிட்ட விளையாட்டு துறையை இந்த திட்டத்தின் மூலம் ஊக்குவிக்க முடிவதோடு அபிவிருத்தி செய்யப்படும் மைதானங்களை பாடசாலை மட்டத்திலான விளையாட்டுகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தை புத்தாண்டிற்கு முன்னர் நிறைவு செய்வதற்குறிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச விளையாட்டு கழகங்கள் மற்றும் பொலிஸ் போன்ற தரப்புகள் உள்டங்கிய நிர்வாக குழுவை ஸ்தாபித்து அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு கையளிக்கப்படும் என்றார் .
அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 25 மாவட்டங்களிலும் மரதன் ஓட்ட போட்டிகளும் சைக்கிலோட்ட போட்டிகளையும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல வழிகளிலும் தேசிய விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்கு பாடசாலை மட்ட ஒத்துழைப்புகள் முக்கியமானதாகும். கல்வி அமைச்சுடன் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 9 ஆம் வகுப்பிலிருந்தே விளையாட்டு துறையில் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதே போன்று விளையாட்டு பாடங்களுக்கான நேர ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துகின்றோம்.