இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச ரீதியில் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் திகழ்கிறது.
இலங்கை தனது முதல் உலகக்கிண்ண வெற்றியை ருசித்து எதிர்வரும் மார்ச் 17ம் திகதியோடு 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்த சிறப்பான தினத்தை நினைவு கூருவதற்காக 1996 உலகக்கிண்ண அணியில் விளையாடிய வீரர்கள் யாழ்ப்பாணத்தின் கிரிக்கட் வீரர்களை உள்ளடக்கிய அணியொன்றுக்கு எதிராக போட்டியொன்றில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் கிரிக்கட்டை பிரபல்யப் படுத்தும் முகமாகவும் கிரிக்கட்டை மேம்படுத்தும் முகமாகவும் இந்த போட்டி அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண அணியுடன் இந்த போட்டியில் விளையாடுவதற்காக உலக கிரிக்கட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, பிரெட் லீ போன்றவர்கள் கலந்துகொள்ளும் இந்தியாவின் வீதி ஒழுங்கு உலகத்தொடரில் இருந்து முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், மார்வன் அத்தப்பது, உபுல் சந்தன மற்றும் ரொமேஷ் கழுவித்தாரன ஆகிய வீரர்கள் விலகிக்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவு உள்நாட்டு கிரிக்கட் மேம்பாட்டிற்கு மிக்க உறுதுணையாக அமையும் என்பதுடன் இதுவரை அங்கீகாரத்திற்காக ஏங்கி கிடைக்கும் பல யாழ் கிரிக்கட் வீரர்களுக்கான அங்கீகாரமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை உலகக்கிண்ண வெற்றியின் 25வது வருட நிறைவை கொண்டாடும் முகமாக கொழும்பிலும் சிறப்பு நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.