இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்டத்தின் 12ஆம் கட்டத்தில் கிறிஸ்டல் பெலஸ் கழகத்திடம் மாத்தறை சிட்டி கழகம் தோல்வி அடைந்தபோதிலும் ஜாவா லேன் கழகத்திற்கும் செரெண்டிப் கழகத்திற்கும் இடையிலான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் மாத்தறை சிட்டி கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.
இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகள் பிரகாரம் மாத்தறை சிட்டி கழகம் 12 போட்டிகளில் அதிகப்பட்சமாக 31 புள்ளிகளையும் ஜாவா லேன் கழகம் 27 புள்ளிகளையும் செரெண்டிப் கழகம் 24 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
மாத்தறை சிட்டி கழகம் சம்பியன் பட்டத்தை உறுதி செய்துகொண்டுள்ள அதேவேளை, 13ஆம் கட்டப் போட்டிகள் நிறைவடையும்போது ஜாவா லேன் கழகமா? செரெண்டிப் கழகமா? இரண்டாம் இடத்தைப் பெறப்போகிறது என்பது தெரியவரும்.
ஜாவா லேன் கழகமும் செரெண்டிப் கழகமும் சமபுள்ளிகளைப் பெற்றால் நிகர கோல்கள் வித்தியாசம் இரண்டாம் இடததைத் தீர்மானிக்கும். ஆனால், ஜாவா லேன் கழகத்திற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக இப்போதைக்கு தென்படுகிறது.
இந்த வாரம்வரை தோல்வி அடையாத அணியாக இருந்த மாத்தறை சிட்டி கழகம், கண்டி போகம்பறை மைதானத்தில் 03 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 1 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் கிறிஸ்டல் பெலஸ் கழகத்திடம் தோல்வி அடைந்தது.
இடைவேளைவரை 2 அணிகளும் கோல்கள் போடாத நிலையில் இடைவேளையின் பின்னர் மாற்று வீரர் மொஹமத் ரிபாஸ் 51ஆவது நிமிடத்தில் கோல் போட்டு கிறிஸ்டல் பெலஸை முன்னிலையில் இட்டார்.
எனினும் 10 நிமிடங்கள் கழித்து போவாடு ப்றின்ஸ் அலாதியான கோல் போட்டு மாத்தறை சிட்டி சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.
தொடர்ந்து பாசித் அஹ்மத் 74ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பெலஸ் வீரர் கழகத்தின் 2ஆவது கோலை போட்டு மாத்தறை சிட்டியை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஜாவா லேனுக்கு மீண்டும் ஏமாற்றம்
குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஜாவா லேன் கழகத்திற்கும் மாவனெல்லை செரெண்டிப் கழகத்திற்கும் இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இப் போட்டி முடிவு ஜாவா லேன் கழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
கடந்த 3 போட்டிகளில் ஒரு வெற்றியைத் தானும் பெற முடியாமல் போன ஜாவா லேன் கழகம் அணிகள் நிலையில் 2ஆம் இடத்தை உறுதி செய்வதற்கு கடைசிப் போட்டிவரை காத்திருக்க நேரிட்டுள்ளது.
இன்றைய போட்டியில் இரண்டு கழகங்களும் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போயின.
ஜாவா லேன் கழக கோல்காப்பாளர் அஷ்பக் அயூப் மிகச் சிறப்பாக செயற்பட்டு எதிரணியின் பல கோல் போடும் முயற்சிகளைத் தடுத்து பலத்த பாராட்டைப் பெற்றார்.
சென் மேரிஸ் வெற்றி
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகம்போ யூத் கழகத்துடனான சம்பியன்ஸ் லீக் போட்டியில் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் வெற்றிபெற்றது.
சென் மேரிஸ் அணித் தலைவர் மரியதாஸ் நிதர்சன் அபாரமாக போட்ட 2 கோல்களே அதன் வெற்றியில் பெரும் பங்காற்றியது.
22ஆவது நிமிடத்தல் நிதர்சன் முதலாவது கோலை போட்டு சென். மேரிஸ் அணியை முன்னிலை அடையச் செய்தார்.
9 நிமிடங்கள் கழித்து நிகம்போ யூத் சார்பாக மூத்த வீரர் கிறிஸ்டீன் பெர்னாண்டோ கோல் நிலையை சமப்படுத்தி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
எனினும் இப் போட்டியில் திறமையாக விளையாடிய நிதர்சன் 40ஆவது நிமிடத்தில் தனது 2ஆவது கோலை போட்டு சென். மேரிஸ் கழகத்தை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் கோல்கள் போட எடுத்த முயற்சிகள் வீண் போயின. இதனை அடுத்து சென் மேரிஸ் 2 – 1 என வெற்றியீட்டியது.
வெற்றி தோல்வி இல்லை
சோண்டர்ஸ் கழகத்திற்கும் நியூ ஸ்டார் கழகத்திற்கும் இடையில் காலி விளையாட்டரங்கில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி 1 – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இரண்டு அணியினரும் திறமையாக விளையாடிய போதிலும் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கோல் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.
இடைவேளையின் பின்னர் 49ஆவது நிமிடத்தில் நிரேஷ் சுந்தரராஜ் போட்ட கோல் சோண்டர்ஸ் கழகத்தை கடைசி நிமிடம்வரை முன்னிலையில் இடச் செய்தது.
ஆனால், போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது நியூ ஸ்டார் வீரர் அஹமத் ஆதில் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிவடையச் செய்தார்.