இவ்வருடம் கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் டென்மார்க் அணி வீரர்கள் தமது மனைவிமார், காதலிகளை தம்முடன் டென்மார்க்குக்கு அழைத்துச் செல்வதற்கு டென்மார்க் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
கத்தாரின் மனித உரிமைகள் நிலைவரத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் உலகப் பிரசித்தி பெற்றவர்களாக விளங்கும் நிலையில் அவர்களின் மனைவிமார், காதலிகளும் பிரபலமாக விளங்குகின்றனர். அப்பெண்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்கு மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளின்போது வீரர்களுடன் அவர்களின் துணைவியர்களும் செல்வது வழக்கம்.
இவ்வருட உலகக் கிண்ண சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பல நாடுகள் தமது வீரர்களுடன் அவர்களின் குடும்பங்களும் கத்தார் செல்வதற்கு அனுமதிவழங்கியுள்ளன.
எனினும், டென்மார்க் வீரர்கள் தம்முடன் தமது குடும்பத்தினரை அழைத்துச் செல்வதை டென்மார்க் கால்பந்தாட்டச் சங்கம் தடை செய்துள்ளது.
கத்தாரின் மனித உரிமைகள் நிலைவரத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், அந்நாட்டில் டென்மார்க்கியர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள டென்மார்க் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
டென்மார்க் கால்பந்தாட்ட சங்கத்தின் ஊடக முகாமையாளர் ஜேக்கப் ஹோயர் இது தொடர்பாக எக்ஸ்ட்ரா பிளேடெட் எனும் பத்திரிகையிடம் பேசுகையில், ‘கத்தாருக்கு லாபத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்ய நாம் விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
‘எனவே முடிந்தளவு நாம் எமது பயணச் செயற்பாடுகளை குறைத்துக் கொள்கிறோம்.
இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிச் சுற்றுப்போட்டிகளில் வீரர்களின் மனைவியரும் காதலிகளும் கால்பந்தாட்டச் சங்கத்தினருடன் பயணம் செய்தனர். ஆனால் இம்முறை அப்பயணத்தை நாம் ரத்துச் செய்துள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் கழகத்துக்காக விளையாடும் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன், எரிக்சன், டொட்டென்ஹாம் கழக வீரர் பியெரி எமிலி ஹோஜ்பேர்க், கிறிஸ்டல் பலஸ் கழக வீரர் ஜோக்கிம் அண்டர்சன், லெய்செஸ்டர் வீரர்கள் ஜெனிக் வெஸ்டர்கார்ட், டேனியல் ஐவர்சென், லீட்ஸ் கழக வீரர் ரஸ்முஸ் கிறிஸ்டியன்சென் ஜேர்மனின் வோல்வ்பேர்க் கழகத்தில் விளையாடும் ஜோனாஸ் வைண்ட். ஆகியோரும் இத்தடையினால் பாதிக்கப்படக்கூடியவர்களில் சிலராவர்.
கத்தாரில் பணியாற்றிய தெற்காசிய தொழிலாளர்களில், 2010 ஆம் ஆண்டின்பின் 6500 பேர் உயிரிழந்துள்னர் என பிரிட்டனின் கார்டின் பத்திரிகை ஆய்வு ஒன்று 2021 பெப்ரவரியில் தெரிவித்திருந்தது. தொழிலாளர்களின் மரணங்கள் தொடர்பாக கத்தார் போதியளவு அறிவிப்பவதில்லை என சர்வசேத தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.
எனினும், உலகக் கிண்ண சுற்றுப்போட்டியை நடத்துவதற்கான திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுவதை கத்தார் உலகக் கிண்ண சுற்றுப்போட்டி ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.
டென்மார்க் கால்பந்தாட்டச் சங்கத்தின் சபை உறுப்பினர்களின் கத்தார் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபையின் அங்கத்தவர்கள் டென்மார்க்கின் தலா ஒரு போட்டியின்போது மாத்திரமே சமுகமளிக்க அனுமதிக்கப்படுவர் எனவும், ஒவ்வொரு போட்டியிலும், சபையின் இரு அங்கத்தவர்களுக்கு மேல் அனு மதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கத்தாரில் எதிர்வரும் நவம்பர் 20 முதல் டிசெம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. டென்மார்க் அணி நவம்பர் 20 ஆம் திகதி தனது முதல் போட்டியில் டுனீசியாவுடன் மோதவுள்ளது.