குழு 1: பாகிஸ்தான்
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் எட்டாவது அத்தியாயத்தின் பிரதான சுற்றான சுப்பர் 12 சுற்று அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் நிலையில் இந்த வருடம் வெற்றிவாகை சூடுவதற்கு பாகிஸ்தான் எதிர்பார்த்துள்ளது.
இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் சிறப்பான பெறுதிகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான் கடந்த வருடம் அரை இறுதிவரை முன்னேறியதுடன் இந்த வருடமும் திறமையை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது.
சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பேர்த் விளையாட்டரங்கில் இன்று எதிர்த்தாடவுள்ளது.
சுப்பர் 12 சுற்றில் குழு 2இல் பங்களாதேஷ், இந்தியா, தென் ஆபிரிக்கா, நெதர்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் உலக சம்பியனான அவுஸ்திரெலியாவிடம் அதற்கு முன்னர் நடைபெற்ற அரை இறுதியில் தொல்வி அடைந்த பாகிஸ்தான், இந்த வருடம் அரை இறுதிக்கு முன்னேறுவதாக இருந்தால் குழு 2இல் முதல் இரண்டு இடங்களுக்குள் வரவேண்டும்.
இந்த வருடம் மிக அண்மையில் நடைபெற்ற சர்தேச இருபது 20 கிரிககெட் தொடர்களில் பாகிஸ்தானின் பெறுபேறுகள் சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக இங்கிலாந்துடனான தொடரில் 3 – 4 என தோல்வி அடைந்த பாகிஸ்தான், வெற்றிபெற்ற 3 போட்டிகளிலும் இறுக்கமான வெற்றிகளையே ஈட்டியது. எனினும், உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெற்ற மும்முனை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் 4இல் வெற்றிபெற்றிருந்தது.
நியூஸிலாந்தில் நடைபெற்ற மும்முனை தொடரில் நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளும் பங்குபற்றின.
இந்த பெறுபேறுகளுக்கு அமைய பாகிஸ்தான், குழு 2 இலிருந்து அரை இறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்தியா, தென் ஆபிரிக்க அணிகளிடமிருந்து பாகிஸ்தான் பலத்த சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
வரலாறு
கடந்த வருடம் வரை நடந்து முடிந்த 7 உலகக் கிண்ண அத்தியாங்களில் பாகிஸ்தான் 5 தடவைகள் அரை இறுதிவரை முன்னேறியதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை கொண்ட அணியாக காணப்படுகிறது.
தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 5 ஓட்டங்களால் தோல்வி அடைந்த பாகிஸ்தான் 2ஆம் இடத்தைப் பெற்றது.
அப் போட்டியில் கௌதம் கம்பீர் குவித்த 75 ஓட்டங்களும் யூசுப் பத்தான் 16 ஓட்டங்களுக்கு வீழ்த்திய 3 விக்கெட்களும் பாகிஸ்தானின் தொல்விக்கு காரணமாக அமைந்தன.
இரண்டு வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் நடைபெற்ற 2ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் பாகிஸ்தான் சம்பியனானது.
லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஷஹித் அப்றிடி பெற்ற ஆட்டமிழக்காத 54 ஓட்டங்களும் அப்துல் ரஸாக் 20 ஓட்டங்களுக்கு விழ்த்திய 3 விக்கெட்களும் பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தன.
அதன் பின்னர் 2010இலும 2012இலும் முறையே அவுஸ்திரேலியாவிடமும் இலங்கையிடமும் அரை இறுதிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
2014இலும் 2016இலும் அரை இறுதி வாய்ப்புகளை பாகிஸ்தான் தவறவிட்டிருந்தது.
ஒன்பது வருடங்களின் பின்னர் கடந்த வருடம் மீண்டும் அரை இறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.
அப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேலும் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஷஹீன் ஷா அப்றிடி வீசிய 19ஆவது ஓவரின் 3ஆவது பந்தை மெத்யூ வேட் உயர்த்தி அடிக்க மிட்விக்கெட் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஹசன் அலி அளவுக்கு அதிகமான வேகத்தில் ஓடி பிடியை நழுவ விட்டார்.
அடுத்த 3 பந்துகளை சிக்ஸ்களாக விளாசிய மெத்யூ வேட், பாகிஸ்தானை அரை இறுதியுடன் வெளியேற்றினார்.
சிறந்த வீரர்கள்
சர்வதேச இருபது 20 துடுப்பாட்ட தரவரிசையில் மொஹமத் ரிஸ்வான் முதலிடத்திலும் அணித் தலைவர் பாபர் அஸாம் 3ஆம் இடத்திலும் இருப்பதுடன் அவர்கள் இருவரும் பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் முக்கிய வீரர்களாவார்.
பாபர் அஸாம் (3231 ஓட்டங்கள், 2 சதங்கள், 29 அரைச் சதங்கள்), மொஹமத் ரிஸ்வான் (2460 ஓட்டங்கள், ஒரு சதம், 22 அரைச் சதங்கள்) பக்கார் ஸமான் (1349 ஒட்டங்கள், 8 அரைச் சதங்கள்), ஷதாப் கான் (97 விக்கெட்கள்), ஹரிஸ் ரவூப் (64 விக்கெட்கள்), ஷஹீன் ஷா அப்றிடி (47 விக்கெட்கள்) ஆகியோர் பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
அவர்களுடன் அசிப் அலி, ஹய்தர் அலி, இப்திகார் அஹ்மத்;, குஷ்தில் ஷா, மொஹமத் ஹஸ்னய்ன், மொஹம்மத் நவாஸ், மொஹமத் வசிம், நசீம் ஷா, ஷான் மசூத் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.