உலகக் கிண்ணத்திற்கான இலகு வாய்ப்பை தவற விட்டது இலங்கை அணி .நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் 6 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 0–2 என இழந்ததோடு உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பையும் பறிகொடுத்தது.
ஹமில்டனில் நேற்று (31) நடைபெற்ற இந்தப் போட்டி இலங்கை அணிக்கு தீர்க்கமான ஆட்டமாக இருந்தது. இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும் நியூசிலாந்துக்கு எதிராக தொடர் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கும் இன்றைய போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டி இருந்தது.
இந்நிலையில் இலங்கை அணி துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தி தனஞ்சய டி சில்வாவை அணியில் இணைத்த நிலையிலேயே மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. எனினும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஒருமுறை தவறினர்.