சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 20% பேருக்கு அதாவது 1.3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவத் துறையினர், பொலிசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஆரோக்கியமாக இருக்கும் 50 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய்களுடன் 50 வயதுக்கு குறைந்தோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2-ம் கட்ட ஒத்திகை நேற்று தொடங்கியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஏற்கனவே 5 மாவட்டங்களில் நடந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 இடங்களில் நேற்று ஒத்திகை நடைபெற்றது.
“போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம்” என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ தடுப்பூசி போடப்படும் என சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கொரோனாவை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்தார்.
2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 2-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை(நேற்று) தொடங்கியது என்று அவர் கூறினார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியா ளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் அதிரிகரித்துள்ளது. 2300 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது முதல் முழுவீச்சில் மத்திய அரசு பணிகளை தொடங்கியது. குறுகிய நாட்கள் இடைவெளியில் இந்தியா கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.