Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பாலஸ்தீன சுதந்திர பிரகடனம் எழுதிய போராளி பெருங்கவி ‘மஹ்மூத் தர்வீஷ்’ | ஐங்கரன் விக்கினேஸ்வரா

பாலஸ்தீன சுதந்திர பிரகடனம் எழுதிய போராளி பெருங்கவி ‘மஹ்மூத் தர்வீஷ்’ | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

”நான் வாழும் வரை என் சொற்களும் வாழும். சுதந்திரப் போராளிகளின் கைகளில் ரொட்டியாகவும் ஆயுதமாகவும் என்றும் இருக்கும்” என்று வார்த்தைகளை ஆயுதமாகக் கூர்தீட்டிய ஒரு பாலஸ்தீன படைப்பிலக்கிய கர்த்தாவே இந்த மஹ்மூத் தர்வீஷ்.

கூர்தீட்டிய வார்த்தைகள் :

விடுதலைக்காக போராடும் ஒடுக்கப்படும் இனத்தின் தரப்பிலிருந்து வெளியாகும் ஒரு இலக்கிய வடிவமானது எத்தனை வீரியம் மிக்கது என்பதை இந்த மூன்று வரிகளில் சொன்னார் பாலஸ்தீனப் புரட்சிக் கவி மஹ்மூத் தர்வீஷ்.

இவருடைய கவிதைகள் பல தமிழில் பலரால் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. பாலஸ்தீனக் கவிதைகள் என்ற தொகுப்பு நூலில் இவருடைய கவிதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நூலில் தர்வீஷின் கவிதைகளோடு சேர்த்து பல பாலஸ்தீனக் கவிஞர்களுடைய கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

பாலஸ்தீன தொடர் வலி :

பாலஸ்தீனத்தையும், அதன் வலியையும் தனது கவிதைகளின் வழியாக உலகிற்கு காட்டிய மிக முக்கியமான கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் (Mahmoud Darwish) ஆவார். அவர் 1941-ம் ஆண்டு மார்ச் 13 அன்று தற்போதைய இஸ்ரேலின் பகுதியாக உள்ள, அன்றைய பாலஸ்தீன பகுதியான அல்பிர்வா எனும் கிராமத்தில் பிறந்தார்.
அக்கிராமம் 1948 இஸ்ரேலியரால் அழிக்கப்பட பெற்றோருடன் லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். 1971 இல் இஸ்ரேலை விட்டு வெளியேறி கெய்ரோவில் வாழ்ந்தார். 1972 முதல் அவர் பெய்ரூத்தில் வாழ்ந்துவந்தார்.

ஏழு வயதிலேயே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காரணமாக தர்வீஷ் இடம்பெயர்ந்து வெளியேற நேர்ந்தது. பின்னர் அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது.

19 வயதில் முதல் கவிதைத் தொகுப்பு :

19 வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். சிறகிழந்த பறவைகள் என்ற தலைப்பில் அத்தொகுப்பு வெளியானது.

1970-ல் கல்லூரி படிப்பிற்காக ரஷ்யாவிற்கு சென்ற அவர், படிப்பினை முடித்த பிறகு கெய்ரோவில் குடியேறினார். தனது
எழுத்துகளுக்காக சிறை தண்டனைகள் பெற்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்.

பின்னர் யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1988-ம் ஆண்டில் பாலஸ்தீன சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவரும் அவரே. தர்வீஷ் அந்த அமைப்பின் மூளையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். பின்னர் 1993-ம் ஆண்டு அந்த அமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அதிலிருந்து விலகினார்.

பாலஸ்தீனை கவிதைகள் வழியாக உலகின் கவனத்திற்கு முன்வைத்தவர் மஹ்மூத் தர்வீஷ். ஒரு நெருக்கடியான, போர்ச்சூழலின், இளமைக் காலத்திலேயே தன் கண் முன்பாக தன் சொந்த கிராமத்தின் அழிவை பார்க்க நேர்ந்தது. பிந்தைய கட்டத்தில் பிறந்த கிராமத்தின் இருப்பிலிருந்து அந்நியமானார். அவரின் மொழியும், பரந்த வாசகர் வட்டமும் மட்டுமே இதிலிருந்து தப்பியது.

இவரின் கவிதைக்கான தொடக்கம் 1950ல் ஆரம்பமாகிறது. ஒரு கவிதை அதன் வாசிப்பு உள்ளோட்டத்தில் தீவிர அதிர்வை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்கு தர்வீஷின் கவிதை உதாரணமாக இருந்தது. அந்த அதிர்வுகள் கவிதை பிரதிகளில் விரவிக் கிடந்தன.

பாலஸ்தீன் மற்றும் அரபு அடையாள அரசியலை கவிதை வெளிப் படுத்தியதால் இஸ்ரேலின் மிரட்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளானார்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பணி :

பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஜனரஞ்சக இசைக்கலைஞர்களுக்கு நிகரான பிரபலம் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

சிறு வயதிலேயே இன அழிப்பின் மோசமான கொடூரத்தை நேரில் பார்த்தார். 1950-ம் ஆண்டிலிருந்தே கவிதைகளை எழுதத் தொடங்கினார். தர்வீஷின் கவிதைகள் கோபத்தையும், ஆவேசத்தையும், வலியையும் ஒருங்கே வெளிப்படுத்தின.

அந்த கவிதைகள் மிகப்பெரும் அதிர்வுகளை உண்டாக்கத் துவங்கின. ”எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைவிட ஒரு படி மேலோங்கியதாக இருக்க வேண்டும்” என்பதே அவரது தத்துவமாக இருந்தது. அப்படிப்பட்ட எதிர்ப்பினை பாலஸ்தீன புரட்சிகர கவிதைகளாக கொண்டுவந்ததால் இஸ்ரேல் அரசால் மிகப்பெரும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்.

சோவியத் ரஷ்யாவில் மேற்படிப்பு:

இக்கவிஞர் மேற்படிப்புக்காக சோவியத் ரஷ்யா சென்றார். சோவியத்திலிருந்து திரும்பிய பின்னர் கெய்ரோவில் குடியேறிய தர்வீஷ் தன் படைப்புகளை புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி நகர்த்தினார்.
முன்னை விட அதி உற்சாகமான மனநிலையில் கவிதைகளை முன்னகர்த்தினார்.

இடைக்கட்டத்தில் தன் எழுத்துகளுக்காக சிறைத் தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது.
இந்த கட்டத்தில் தர்வீஷ் தன் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தில் இணைந்தார். யாசர் அரபாத் தலைமையிலான அந்த இயக்கத்தின் பெரும் மூளையாக தர்வீஷ் செயல்பட்டார்.

பாலஸ்தீன பேச்சுவார்த்தை நடுவர் எட்வர்ட் செய்த்துடன் இணைந்து அந்த இயக்கத்தில் பணியாற்றிய மஹ்மூத் தர்வீஷ் 1993ல் ஒஸ்லோ ஒப்பந்தம் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகினார்.

எகிப்தின் பிரபலமான அல் அஹ்ரம் பத்திரிகையில் சில காலம் தர்வீஷ் பணியாற்றினார். இந்த பத்திரிகை அனுபவம் தர்வீஷுக்கு வெகுவான இதழியல் அனுபவத்தை கொடுத்தது. தர்வீஷுக்கு அரபுலகில் வெகுவான கவனப்படுத்தலை ஏற்படுத்தியது அவரின் அடையாள அட்டை கவிதையாகும்.

தர்வீஷுன் கவிதைத் தொகுப்புகள்:

ஆலிவ் இலைகள், ஒரு பாலஸ்தீனக் காதலன், கலீலியில் பறவைகள் மடிகின்றன, ஏழாவது முயற்சி, மனித மாமிசத்தின் இசை, நீ செய்ததற்கு மன்னிப்பு கேளாதே உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

இவை உலகின் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. தர்வீஷின் கவிதைகளை அப்படியே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் உணர்வுப்பூர்வமாக பொருத்திப் பார்த்திட முடியும்.

அரபு மொழியின் மீட்பாளர் :

தர்வீஷின் அரபு மொழியுடனான உறவு மற்றவர்கள் மத்தியில் இருந்து தனித்த ஒன்றாக இருந்தது. அரபு மொழியில் தன் கவிதைகள் வழி புதிய மொழி மண்டலத்தை உருவாக்கினார்.
அதில் புதிய ஆளுகையையும், ஏக்க உணர்வையும் அவரால் தோற்றுவிக்க முடிந்தது.

இதன் காரணமாக அரபு இலக்கிய விமர்சகர்களால் “அரபு மொழியின் மீட்பாளர்” என்று அழைக்கப்பட்டார்.
தர்வீஷின் மொழி ஆழத்தோடு கூடிய சாதாரணமாகவும், அவர் மற்றும் சார்பானோரின் அக நெருக்கடிகளை வித்தியாசப்படுத்தி அதீதம் கலந்த கற்பனை வெளிக்குள் சலனித்த ஒன்றாகவும் இருந்தது. கவிதைகள் குறியீடுகள், உருவகங்கள், பிம்பங்கள் இவைகளை கவனமாக தேர்ந்தெடுத்த ஒன்றாக இருந்தன.

அதற்குள் தீவிர கலைவேட்கையும், அரசியல் அறிவும், சாதாரண கவிதைகள் சொல்ல முடியாமல் தவிக்கிற கருதுகோளின் பொருண்மையும் வெளிப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேலிய தாக்குதல் தருணத்தில் அவரிடமிருந்து பல கவிதைகள் வெளிவந்தன.

வெளியான நூற்களும் விருதும்:

இவரது முதல் கவிதைத்தொகுதியான சிறகிழந்த பறவைகள் 1960 இல் வெளிவந்தது. பின்னர் 1969 இல் ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் அமைப்பு இவருக்கு தாமரை விருது வழங்கி கௌரவித்தது. ஒலிவம் இலைகள் (1964), பலஸ்தீனத்திலிருந்து ஒரு காதலன் (1966), இரவின் முடிவு (1967), கலிலீயில் பறவைகள் இறக்கின்றன (1970), நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கவில்லை (1972), ஏழாவது தாக்குதல் (1975),திருமணங்கள் (1977) ஆகியன இவரது படைப்புக்களாகும்.

தமிழில் வெளியான படைப்புகள்:

வார்த்தைகளை ஆயுதமாகக் கூர்தீட்டிய பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்வீஷ் தமிழில் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா மொழிபெயர்த்து தொகுத்த “மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள்” என்னும் நூலிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

உயிர்மை பதிப்பகத்தினுடைய “நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்” என்ற நூலில் தர்வீஷினுடைய கவிதைகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்வீஷ் எழுதிய

“பதிவு செய்
நான் ஓர் அரேபியன்
என் அடையாள அட்டை எண் ஐம்பதாயிரம்
எனக்கு குழந்தைகள் எட்டு
ஒன்பதாவது, கோடை விடுமுறைக்கு பின் வரும்
உனக்கு கோபமா?

எனும் கவிதை எம்.ஏ. நுஹ்மான் மொழிபெயர்த்த பாலஸ்தீன் கவிதைகள் என்ற தொகுதியில் வெளியாகி இருக்கிறது.

அதிகார திணிப்புக்கு எதிரான சுய அறிமுகமும், கொதிநிலையான மனமும் இதில் வெளிப்படுகிறது. அக்காலகட்டத்தில் ஆப்ரிக்க அனுபவத்தை ஒத்த ஒன்றாக இக்கவிதை இருந்தது.
தர்வீஷின் வாழ்க்கை புற நெருக்கடிகள் காரணமாக நாடோடியின் வாழ்க்கைச்சூழலை பிரதிபலித்தது. பெய்ரூட், அம்மான், கெய்ரோ, மற்றும் பாரிஸ் என்ற வட்டத்தின் விளிம்பை தொட்டு கொண்ட ஒன்றாக அவரின் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது.

அவரின் சொந்த கிராமத்தை இடப்பெயர்வு நெருங்கிய போதும் அவரால் அங்கு குடியேற இயலவில்லை. ஆக்கிரமிப்பு சமூகத்தின் நெருக்கடி அவரை வெகுதூரத்திற்கு இழுத்து சென்றது. இதன் ஒரு கட்டம் சுழற்சி முடிவு பெறாத தருணத்தில் தர்வீஷிடமிருந்து பின்வரும் கவிதை வெளிப்பட்டது.

குறிப்பிட்டார் மஹ்மூத் தர்வீஷ். எப்போதுமே தன் வாசகர்களோடும் தன்னை நேசிப்பவர்களிடத்திலும் பரஸ்பர உறவை கொண்டிருந்தார் தர்வீஷ். இவர்களின் மத்தியில் தர்வீஷ் வித்தியாச உருவமாகவே இருக்கிறார். அரபு மற்றும் பாலஸ்தீன் வெளியில் நாற்பதாண்டுகளுக்கு மேலாக கவிதைகளோடு இயங்கிய தர்வீஷ் மரணத்தின் இடைவெளியில் இன்னும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கிறார்.

தர்வீஷின் படைப்புகள் :

1.Wingless birds (poetic collections 1960)
2. Leaves of olives (poetic collections 1964)
3. A lover from palestine (1966)
4. Dairy of a palestine wound (1969)
5. Writing in the light of the gun (1970)
6. Mahmood darwish works (two volumes 1971)
7.Light rain in a distant autumn
8. The Adam of two edens
9. Unfortunately it was paradise (Selected Poems 2003)
10.Selection of poems (new works 2003)

மரணத்தின் இறுதி வரிகள்:

காத்திருந்த மரணத்தின் கால இடைவெளியில் காவியம் படைத்த மஹ்மூத் தர்வீஷ் மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை.

தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. அரபு இலக்கிய வெளியில் அந்த வினயங்களை கவிதைகளாக அதிக அளவில் வெளிப் படுத்தியவர் மஹ்மூத் தர்வீஷ்.

அவரின் கவிதைகள் எல்லா தருணங்களிலும் மரணப்பெருவெளியில், வாழ்விலிருந்து அந்நியமாக்கலுக்கு பணிக்கப்பட்ட, அனாமதேய சூழலின் விளைபொருளாக எழுந்தவையே. அகவை 67இல் (ஆகஸ்ட் 9, 2008) மரணிப்பின் பின்னரும் பாலஸ்தீனத்துல் வாழும் பெருங் கவியாக எப்போதும் மிளிர்கின்றார் மஹ்மூத் தர்வீஷ்.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More