ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழை வெள்ளம் காரணமாக அனைத்து வகையான பொது போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மின்சாரம் தகவல்தொடர்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது.