மாலியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படும் என ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவ ஆட்சியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதனை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ அரசின் செய்தித் தொடர்பாளர் இஸ்லாமியில் வாகு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எவ்வளவு காலத்தில், எவ்வாறு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு செய்யப்படும்’ என கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வந்த 75வயதான இப்ராஹிம் பவுபக்கர், பயங்கர வாதத்தை ஒடுக்க தவறியதாகவும், 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து, மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவும் கூறி, மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதுடன், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதன் விளைவாக, நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தினர், ஜனாதிபதி கெய்டாவையும், பிரதமர் பவ்பவ் சிஸ்சேவையும், கைது செய்து, வீட்டு காவலில் வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கெய்டா தனது பதவியை இராஜினாமா செய்தார்.
தற்போது, நாட்டிற்கு தலைவர் என்று யாரும் இல்லாமல் போயுள்ள நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட 5 ராணுவ உயரதிகாரிகளுள் ஒருவரான அஸிமி கொய்டா, தன்னை நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார்.
இதனிடையே, மாலியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு, ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு பல்வேறு உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளன.