காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி கான் மொஹம் வர்தக் காயமடைந்துள்ளதுடன், ஒன்பது பேர் உயிரழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காவல்துறை வட்டாரங்கள் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்னர்.
அத்துடன் இதன்போது சுமார் 30 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பானது வார்தக்கின் வாகனத்தை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டதாக சட்ட அமுலாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய பயங்கரவாத தாக்குதலின் மற்றொரு அத்தியாயமாக ஆப்கானில் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த மூன்று மாதங்களில் தலிபான்கள் நடத்திய 35 தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் 507 வெடிகுண்டு வெடிப்புகளில் 480 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கஸ்னியில் மட்டும் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
கட்டார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபானுகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போதிலும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் வன்முறைச் சம்வங்கள் அரங்கேறிய வன்னமே உள்ளது.