சிங்கப்பூரில் போதைவஸ்த்துக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி மலேசியத் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை (27 ) சாங்கி நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 3 மேசைக்கரண்டி (43 கிராம் ) அளவான போதைவஸ்தை எடுத்துவர முற்சித்த குற்றச்சாட்டில் தர்மலிங்கம் ( 34 வயது ) என்ற மேற்படி நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் 10 வருடங்களுக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்திருந்தார்.
சிங்கப்பூரில் 15 கிராமிற்கு அதிகமான போதைவஸ்தை வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.
நாகேந்திரன் தர்மலிங்கம் மதிநுட்ப ஆற்றல் குறைந்த ஒருவர் என மருத்துவ பரிசோதனையொன்று தெரிவிக்கின்ற நிலையில், அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அவரது மரணதண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தக்கோரும் இணையத்தளம் மூலமான மனுவில் 70 ஆயிரம் பேர் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றத்தை தடுத்து நிறுத்த அவரது குடும்பத்தினர் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தனக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து தனது இறுதிப் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அவ்வாறு அவர் தனக்குப் பிடித்தமான ஜீன்ஸ் மற்றும் ரீசேர்ட்டை அணிந்தவாறு நாற்காலியில் அமர்ந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இங்கு காணலாம். அத்துடன் அவர் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் இரு மணித்தியாலங்களை கழிக்கவும் அனுமதிக்கப்பட்டது.