இங்கிலாந்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு ஆறுதல் அளிப்பதாக இன்றைய (15) பட்ஜெட் அமைந்துள்ளது.
அதாவது, இங்கிலாந்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கான இலவச குழந்தைப் பராமரிப்பு பட்ஜெட்டில், ஒன்று மற்றும் இரண்டு வயதுக் குழந்தைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் 3 மற்றும் 4 வயதுக் குழந்தைகளுக்கே வாரத்துக்கு 30 மணிநேர இலவச குழந்தைப் பராமரிப்பு வசதி வழங்கப்பட்டது.
எனினும், 3 மற்றும் 4 வயது குழந்தைகளுக்கான தற்போதைய திட்டம், இனி 1 மற்றும் 2 வயதுக் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, அதிக மக்களை வேலைக்கு செல்ல ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது.
இதற்காக வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு சமமான நிதி விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், குழந்தைப் பராமரிப்பு வழங்குநர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் மணி நேரக் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளிகளில் குழந்தைப் பராமரிப்பு ஏற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு நிதி வழங்கப்படவுள்ளது.