ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் பொறுப்பை கிறிஸ் மின்ஸ் (Chris Minns) ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
அந்த மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மிதவாத தேசிய ஆட்சி நடத்தப்பட்டுவந்தது. ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனிசியின் (Anthony Albanese) நிர்வாகத்திற்கு அது ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
தனியார் துறை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, எரிசக்தி விலைகளைத் குறைப்பது, பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தைக் கூட்டுவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து பிரசாரத்தின்போது மின்ஸ் உறுதியளித்திருந்தார்.
எனினும், அந்த உறுதிமொழிகளால் பணவீக்கம் அதிகரிக்கக்கூடுமென பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றதால் இனி ஆஸ்திரேலியாவின் தலைநிலத்தில் உள்ள மாநில, மத்திய அரசாங்கங்கள், ஆளுங்கட்சியின்கீழ் இயங்கும் என்பதுடன், டாஸ்மேனியா தீவு மாநிலம் மட்டுமே பழைமைவாதக் கட்சியின்கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.